Thursday, March 19, 2015

நானெல்லாம் 5 வயதாக இருக்கும் போது

நானெல்லாம் உன்னைப் போன்று 5 வயதாக இருக்கும் போது என என் கதையை ஆரம்பித்தேன் என் மகனிடம். அப்படியென்ன 5 வயதில் நடந்தது?

பிறந்த குழந்தைகளெல்லாம் ஒரு வயதில் எழுந்து நின்று நடக்க ஆரம்பிக்கும். நானோ ஐந்து வயது வரையும் அதைத்தான் செய்து கொண்டிருந்தேனாம். ஐந்து வயது முடிந்து பள்ளிக்கு செல்லும் பருவத்தில் தான் ஒழுங்காக நடக்க ஆரம்பித்திருக்கிறேன். எனவே பேதுரு என்னும் பெயருடைய என்னை பேத்தை என்று சிறுவயதில் என்னை வட்டப்பெயருடன் அழைப்பதுண்டு.

நான் ஏன் ஐந்து வயது வரை நடக்கவில்லை? நான் இப்போது மருத்துவரென்பதால், எனது சிந்தனைகள் அவ்விதம் ஓடும். ஆனால், அவ்வித சிந்தனைகள் எனது பெற்றோர்களுக்கு வந்திருக்க வாய்ப்பு கொஞ்சம் குறைவு. அன்றாடம் காய்ச்சிகளான அவர்களுக்கு ஏழாவதாகவோ எட்டாவதாகவோ பிறந்த என்னைப் பற்றி அவ்வளவு தூரம் யோசிக்க நான் என்ன செல்லப்பிள்ளையா? அன்றாடம் உழைத்து சம்பாதித்து தான் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய நிலையில் உழைத்த அவர்களுக்கு என்னைமட்டும் பற்றி கவலைப்பட நேரமெல்லாம் இருந்திருக்காது.

பின்னாட்களில் பிழைத்துக் கொண்ட ஐந்து பிள்ளைகளில் நான் ஐந்தாவது, அதாவது கடைசி என்பதால், என்மீது கொஞ்சம் அதிக பாசம் உண்டு என்பது எனது கணிப்பு. இருப்பினும் நான் எனது ஐந்து பிள்ளைகளையும் சமமாகவே நேசிக்கிறேன் என எனது அப்பா அவ்வப்போது சொல்வதுண்டு. ஆனாலும் காலஞ்சென்ற எனது நான்காவது அண்ணன் மேத்யூ மீது எனது அம்மாவிற்கு கொஞ்சம் அதிக பாசம் உண்டு என்பதும் எனது கணிப்பு.

ஐந்துவயது வரை பேத்தையாக இருந்த நான் ஒரு மெத்தப் படித்தவனாக வருவேன் என யாரும் நினைத்திருக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும் ‘தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே, என்னை அறிந்து அழைத்த தேவன்’ அவரது திட்டங்கள் எனது வாழ்க்கையில் உரித்த நேரங்களில் நிறைவேறிட தவறவில்லை. எனவே தான், அதற்கு நன்றிக்கடனாக, அவரது திட்டங்களை திடமாய் அறிந்து அவைகளை நிறைவேற்றிட நானும் முனைகிறேன். 

No comments:

Post a Comment